96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா?

 

இவ்வசனங்களில் (3:83, 13:15, 41:11) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் இறைவனுக்கு அடிபணிகின்றன என்று பொதுவாகக் கூறாமல் விரும்பியோ, விரும்பாமலோ அடிபணிகின்றன என்று கூறப்படுகின்றது.

 

மனிதர்களிலும், ஜின்களிலும் பெரும்பாலோர் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கும்போது அனைத்தும் அடிபணிவதாக இறைவன் கூறுவது ஏன்?

 

'அடிபணிதல்' என்பது இந்த இடத்தில் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் இச்சந்தேகம் விலகி விடும்.

 

ஒவ்வொரு பொருளையும் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றும் வகையில் இறைவன் படைத்துள்ளான். அப்பணிக்கு அவை பயன்படுகின்றன என்பது தான் இதன் பொருள்.

 

மனிதனின் ஒவ்வொரு உறுப்புக்களும் எதற்காகப் படைக்கப்பட்டனவோ அந்தப் பணியைச் செய்கின்றன.

 

மனிதனுக்கு உணவாகப் பயன்படும் வகையில் சில உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். அந்த உயிரினங்களுக்கு உயிரை விடுவது பிடிக்காவிட்டாலும் இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுகின்றன.

 

24 மணி நேரமும் இடைவிடாது உழைக்கும் உறுப்புக்கள் மனிதனுக்குள் இருக்கின்றன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பணி சிரமமாக இருந்தாலும் அப்பணியை அவை செய்து வருகின்றன.

 

இந்த அடிபணிதலையே இவ்வசனம் கூறுகிறது. வணக்க வழிபாடுகளை இவ்வசனம் குறிக்காது.

 

ஏனெனில், இறைவனுக்கு வணக்க வழிபாடு செய்யாத கோடிக்கணக்கான மனிதர்களும், ஜின்களும் இருக்கின்றனர் என்று 5:32, 5:49, 7:179, 22:18, 57:16 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

எனவே அனைத்தும் வணக்க வழிபாடுகள் செய்கின்றன என்று இவ்வசனங்களுக்குப் பொருள் கொள்ள முடியாது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48114